ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் அருகே மேலமாட வீதியில் வசிப்பவர் அரையர் வடபத்ரசாயி சுவாமிகள். இவர் ஓர் இயற்கை ஆர்வலர் ஆவார்.
இவர் நகரில் மழை வேண்டி பல ஆண்டுகளாக செண்பகத்தோப்பில் உள்ள கோவில்கள், திருமுக்குளத்தில் உள்ள சக்கரத்தாழ்வார் சுவாமிகளுக்கு வருண ஜெபம் நடத்தி, மழை வேண்டி பூஜைகள் செய்து வருகிறார். மேலும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக பல இடங்களில் மரக்கன்றுகளை நட்டு தனிமனிதனாக பல்வேறு சேவைகள் புரிந்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 2020 மார்ச் மாதம் ஊரடங்கின் போது சுமார் 50 நாள்கள் தனது வீட்டில் வைத்து மதிய உணவு தயார் செய்து சாலை ஓரங்களில் வசிப்போர், முதியோர், ஆதரவற்றோர் ஆகியோருக்கு வழங்கிவந்தார். இவரது சேவையைப் பாராட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா மற்றும் பல்வேறு தன்னார்வ அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் தனிநபர் ஆகியோர் பாராட்டி உள்ளனர்.
தற்போது நாடு முழுவதும் இரண்டாம்கட்ட அலை வீசி மக்களை அச்சப்படும் இச்சமயத்தில் அரையர் வடபத்திர சாயி சுவாமிகள் தன் வீட்டு முன்பு முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும், அதனால் நாம் காப்பாற்றப்படுவோம் என்றும் விழிப்புணர்வு டிஜிட்டல் பேனர் வைத்து மேலமாட வீதி, ஆண்டாள் கோவில் மற்றும் முக்கிய வீதிகளில் செல்லும் பொதுமக்களை அழைத்து முகக்வசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று எடுத்துக்கூறி அவர்களுக்கு முகக் கவசத்தை இலவசமாக வழங்கி விழிப்புணர்வு செய்து வருகிறார்.
அரசும், அரசு அதிகாரிகளும் செய்ய வேண்டிய மக்களை காக்கும் பணியினை, தான் வறுமையில் இருந்தாலும் தனி ஒருவராக செய்துவரும் அரையர் சுவாமிகளின் சேவையை நாம் பாராட்டுவோம்.