பவானி: மேட்டூர் மேற்குக்கரை பாசன வாய்க்காலில் சுரங்க நீர்வழிப்பாதையில் (சைபன்) அடைப்பு ஏற்பட்டுள்ளதால், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டு சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு மற்றும் மேற்குக் கரை பாசனப் பகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை தண்ணீர் திறக்கப்பட்டது. மேட்டூர் மேற்குக் கரை வாய்க்காலில் 200 கன அடி திறக்கப்பட்ட நிலையில், சுமார் 24 மைல் தொலைவுக்கு திங்கள்கிழமை தண்ணீர் சென்று சேர்ந்தது. இந்த நிலையில், குறிச்சி அருகே வாய்க்காலில் சுமார் 600 மீட்டர் தொலைவுக்கு தரைக்கடியில் தண்ணீர் சென்று மற்றொரு பகுதியில் வெளியேறும் வகையில் சுரங்க நீர்வழிப்பாதை (சைபன்) உள்ளது.
இப்பாதையில் திங்கள்கிழமை நள்ளிரவில் அடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் செல்லாமல் தேங்கி, வாய்க்காலின் பக்கவாட்டில் பெருக்கெடுத்துச் சென்றது. இதுகுறித்து, பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால், வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டதோடு, அடைப்பினை நீக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
சம்பவ இடத்தில் பொதுப்பணித்துறையின் மேட்டூர் அணை செயற்பொறியாளர் தேவராஜன், உதவி பொறியாளர் டி.சுப்பிரமணியன், அம்மாபேட்டை உதவிப் பொறியாளர் சாமிநாதன் மேற்பார்வையில் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டனர். 2 ராட்சத இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு, பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது.
தரைக்கடியில் செல்லும் நீர்வழிப்பாதையில் 4 காற்று போக்கிகள் உள்ளது. இதில், அடுத்தடுத்து 2 காற்று போக்கிகளில் உள்ள அடைப்புகள் நீக்கப்பட்டது. அப்போது, தண்ணீர் பீரிட்டு வெறியேறிச் சென்றது. சுரங்கப்பாதையில் அடைப்பு ஏற்பட்டதால், அடைப்பினை நீக்கும் பணியையும் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் திரண்டு ஆர்வத்துடன் பார்த்தனர். சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்து, விரைவில் தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.