இளையான்குடியில் தலைவர் அறையில் முதல்வர் படம் விவகாரம்: 3 திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு; 5 பேர் ஆதரவால் பிரச்னை

முதல்வர் ஸ்டாலின் படம் வைக்கப்படாத பிரச்னை தொடர்பாக ஒன்றியக்குழுக் கூட்டத்தில் வெளிநடப்பு செய்த திமுக கவுன்சிலர்கள் மூவரின் நடவடிக்கைக்கு பிற திமுக கவுன்சிலர்கள் ஆதரவு தெரிவிக்காத போக்குக்கு திமுகவினர
இளையான்குடியில் நடைபெற்ற ஒன்றியக்குழுக் கூட்டம்
இளையான்குடியில் நடைபெற்ற ஒன்றியக்குழுக் கூட்டம்
Published on
Updated on
1 min read


சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தலைவர் அறையில் முதல்வர் ஸ்டாலின் படம் வைக்கப்படாத பிரச்னை தொடர்பாக ஒன்றியக்குழுக் கூட்டத்தில் வெளிநடப்பு செய்த இளையான்குடி வடக்கு ஒன்றியத்தைச் சேர்ந்த திமுக கவுன்சிலர்கள் மூவரின் நடவடிக்கைக்கு பிற திமுக கவுன்சிலர்கள் ஆதரவு தெரிவிக்காத போக்குக்கு திமுகவினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தின் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த முனியாண்டி பதவி வகித்து வருகிறார். திமுக ஆட்சி பொறுப்பேற்று மூன்று மாதங்களாகியும் தலைவர் முனியாண்டி அறையில் முதல்வர் ஸ்டாலின் படம் வைக்கப்படவில்லை என திமுகவினர் புகார் கூறி வந்தனர்.

இந்நிலையில், இளையான்குடி ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டத்தில் இப்பிரச்னை குறித்து இளையான்குடி வடக்கு ஒன்றியத்தைச் சேர்ந்த திமுக கவுன்சிலர்கள் முருகன், மகேஸ்வரி, பழனியம்மாள் ஆகியோர் கேள்வி எழுப்பி, தலைவர் அறையில் ஸ்டாலின் படம் வைக்கப்படாததைக் கண்டித்து கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்தனர்.

மேலும் இதே கூட்டத்தில் ஒன்றியத் தலைவர் முனியாண்டியின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவைச் சேர்ந்த கவுன்சிலர் சண்முகம் கூட்ட அரங்கில் தரையில் உட்கார்ந்து போராட்டம் நடத்தினார்.

இளையான்குடி ஒன்றியத்தில் திமுகவுக்கு என 8 கவுன்சிலர்கள் உள்ளனர். இவர்களில் இளையான்குடி வடக்கு ஒன்றியத்தைச் சேர்ந்த மேற்கண்ட மூன்று திமுக கவுன்சிலர்கள் மட்டும் முதல்வர் ஸ்டாலின் படம் வைக்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்ட அரங்கிலிருந்து  வெளிநடப்பு செய்த நிலையில், அக் கட்சியை சேர்ந்த மற்ற 5 கவுன்சிலர்களும் வெளிநடப்பு செய்யாமல் கூட்ட அரங்கிலேயே உட்கார்ந்திருந்தனர்.

தற்போது இளையான்குடி ஒன்றியத்தில் இப்பிரச்னை குறித்து திமுகவினர் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

முதல்வர் ஸ்டாலின் படம் ஒன்றியத் தலைவர் அறையில் வைக்கப்படாததைக் கண்டித்து  திமுகவைச் சேர்ந்த 3 ஒன்றியக் கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். ஆனால் மற்ற 5 கவுன்சிலர்களும் இந்த கவுன்சிலர்களின் வெளிநடப்பு நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிக்காமல் கூட்ட அரங்கில் உட்கார்ந்திருந்தது திமுக கவுன்சிலர்களுக்குள் ஒற்றுமை இல்லாததைக் காட்டுவதாகவும் அதிமுக தலைவரின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிப்பது போல் உள்ளது என்றும் இளையான்குடி ஒன்றியத்தைச் சேர்ந்த திமுகவினர் புகார் கூறி வருகின்றனர். 

மேலும், இப்பிரச்னை முகநூல் மற்றும் வாட்ஸ்அப் தளங்களிலும் பகிரப்பட்டு வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com