எழுத்தாளர் கோணங்கிக்கு கி.ரா. விருது

சக்தி மசாலா நிறுவனம், விஜயா வாசகர் வட்டம் வழங்கும் 2021 ஆம் ஆண்டுக்கான கி.ரா. விருதுக்கு எழுத்தாளர் கோணங்கி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
எழுத்தாளர் கோணங்கிக்கு விஜயா வாசகர் வட்டத்தின் கி.ரா. விருது
எழுத்தாளர் கோணங்கிக்கு விஜயா வாசகர் வட்டத்தின் கி.ரா. விருது
Published on
Updated on
1 min read

கோவை: சக்தி மசாலா நிறுவனம், விஜயா வாசகர் வட்டம் வழங்கும் 2021 ஆம் ஆண்டுக்கான கி.ரா. விருதுக்கு எழுத்தாளர் கோணங்கி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக கோவை விஜயா பதிப்பக நிறுவனர் மு.வேலாயுதம், வழக்குரைஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

உலக புத்தக தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 23-ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில், இதையொட்டி கடந்த 5 ஆண்டுகளாக கோவை விஜயா பதிப்பகத்தின் வாசகர் வட்டம் சார்பில் சிறந்த படைப்பாளிக்கு விருது வழங்கப்படுகிறது. படைப்பாளிகளுக்கு ஜெயகாந்தன் விருது, கவிஞர் மீரா விருது, புதுமைப்பித்தன் விருது, சிறந்த அரசு நூலகருக்கு சக்தி வை கோவிந்தன் விருது, சிறந்த புத்தக விற்பனையாளருக்கு வானதி திருநாவுக்கரசு விருது ஆகியவை வழங்கப்படுகின்றன.

இந்நிலையில் கடந்த ஆண்டு கி.ரா.வின் 98 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவர் வாழ்ந்த காலத்தில் அவருடைய பெயரில் ரூ.2 லட்சம் பரிசுத் தொகையுடன் கூடிய கி.ரா. இலக்கிய விருதை வழங்க நடிகர் சிவகுமாரின் முயற்சியின் பேரில் சக்தி மசாலா துரைசாமி - சாந்தி துரைசாமி தம்பதியினர் முன்வந்தனர். இதையடுத்து கடந்த ஆண்டு கி.ரா.வின் பிறந்த நாளன்று புதுவையில் உள்ள அவரது இல்லத்தில், அவரது கரங்களால் எழுத்தாளர் கண்மணி குணசேகரனுக்கு கி.ரா.விருது வழங்கப்பட்டது.

அவரது மறைவுக்குப் பிறகு ஜூன் மாதம் கோவையில் நடைபெற்ற புகழாஞ்சலி நிகழ்ச்சியில் விருதுத் தொகையை ரூ.5 லட்சமாக உயர்த்திக் கொடுப்பதாக சக்தி மசாலா தம்பதியினர் அறிவித்தனர். அதன்படி முதலாம் ஆண்டு விருது பெற்ற எழுத்தாளர் கண்மணி குணசேகரனுக்கு மீதமுள்ள ரூ.3 லட்சம் அனுப்பப்பட்டது.

இந்நிலையில் 2021 ஆம் ஆண்டுக்கான கி.ரா. விருதுக்கு எழுத்தாளர் கோணங்கி நடுவர் குழுவால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு செப்டம்பர் 19 ஆம் தேதி மாலை 6 மணிக்கு இணையவழியில் நடைபெறும் நிகழ்ச்சியில் விருது வழங்கப்படுகிறது.

கோவில்பட்டியைச் சேர்ந்த எழுத்தாளர் கோணங்கியின் இயற்பெயர் இளங்கோவன். நென்மேனி மேட்டுப்பட்டி கிராமத்தில் 1956 நவம்பர் 1 ஆம் தேதி பிறந்தார். சுதந்திர போராட்ட வீரர் மதுரகவி பாஸ்கரதாஸின் மகள் சரஸ்வதி - எழுத்தாளர் மே.சு.சண்முகம் தம்பதியரின் இரண்டாவது மகனான கோணங்கி 1980களின் தொடக்கத்தில் இருந்து எழுதி வருகிறார். பாழி, பிதிரா, த. நீர்வளரி ஆகிய நாவல்களை எழுதியுள்ளார். இவரது சிறுகதைகள் 6 நூல்களாக தொகுக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com