ராணுவ வீரர் உடல் கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் விபத்து
ஹெலிகாப்டர் விபத்தில் பலியானவர்களின் உடலைக் கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் வாகனம் விபத்திற்குள்ளானது.
கோவையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் குன்னூர் வெலிங்டன் ராணுவ கல்லூரிக்கு செல்லும் போது ஏற்பட்ட விபத்தில் முப்படை தளபதி விபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் புதன்கிழமை பலியாகினர்.
இவர்களின் உடலுக்கு வெலிங்டன் ராணுவ தளத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முப்படைகளின் தளபதிகள், தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தராஜன், அமைச்சர்கள், அதிகாரிகள் இன்று அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படிக்க | விபின் ராவத் உள்பட 13 பேரின் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி
அதன்பின்னர், குன்னூரில் இருந்து உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடல்களை கொண்டு சென்ற 13 ஆம்புலன்ஸ்கள் மேட்டுப்பாளையம் வழியாக சூலூர் விமானப்படைத்தளத்துக்கு பிற்பகல் சென்றன. அப்போது, காரமடை அருகே ஒரு ஆம்புலன்ஸ் திடீரென முன்னால் சென்ற வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதையடுத்து, அந்த ஆம்புலன்ஸில் இருந்த உடலானது, வேறு ஆம்புலஸ்க்கு மாற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டது. இதேபோல், மேட்டுப்பாளையம் கல்லார் அருகே பாதுகாப்புப் பணிக்கு வந்திருந்த திருப்பூர் அதிரடிப்படை போலீஸாரின் வாகனம் பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், வாகனத்தின் முன்பகுதி சேதமானது. போலீஸôர் லேசான காயங்களுடன் தப்பினர். இதையடுத்து, அப்பணிக்கு மாற்று போலீஸார் நியமிக்கப்பட்டனர்.
இருப்பினும், அணிவகுப்பில் இணைக்கப்பட்டிருந்த காலி ஆம்புலன்ஸ் மூலம் வீரரின் உடலை மாற்றி தொடர்ந்து சூலூர் நோக்கி கொண்டு வருகின்றனர்.