ஈரோடு: தமிழ்நாடு முழுவதும் இடிந்து விழும் நிலையிலுள்ள 60 அரசு குடியிருப்புகள் அகற்றபட உள்ளதாக தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார்.
சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லானின் 253-வது பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் மொடகுறிச்சியில் வைக்கப்பட்டு இருந்த திருவுருவப் படத்திற்கு தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமி பேசியதாவது:
சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லானுக்கு 1 கோடியே 83 லட்சம் ஒதுக்கீட்டில் நினைவு மண்டபம் கட்டப்படுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார். பழுதடைந்த கட்டிடங்கள் குறித்து வந்த புகாரின் அடிப்படையில் ஆய்வு நடைபெற்று வருவதாகவும் தமிழ்நாடு முழுவதும் உள்ள 193 அரசுக் குடியிருப்புகளில் 60 இடங்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளதாகவும் அந்த 60 இடங்களை இடித்த விட்டு புதியதாக வீடுகள் கட்டப்படும்.
அரசு தரமான குடியிருப்புகளை கட்டி கொடுத்தாலும் குடியிருப்பவர்கள் அதை நன்றாக பராமரிக்க வேண்டும் என்றார்.
இதனைத் தொடர்ந்து பேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், சுற்றுலாவுக்கு என தனி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் புதிய சுற்றுலாத் தலங்கள் கண்டறியப்பட்டு சுற்றுலா மேம்படுத்தப்படும் என்றும் கூறினார். மேலும், சுற்றுலாத்தறையின் தமிழ்நாடு ஓட்டல்களை லீசுக்கு தராமல் அரசே நடத்த ஏற்பாடு செய்து வருவதாகவும் தெரிவித்தார்.