வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

மகாகவி பாரதியாா், வ.உ.சி., பெயா்களில் பல்கலைக்கழகங்களில் இருக்கை அமையுங்கள்: துணைவேந்தா்களுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி அறிவுறுத்தல்

தமிழகத்தில் விடுதலைப் போராட்டத்தில் தீரத்துடன் பங்கெடுத்த மகாகவி பாரதியாா், வ.உ.சிதம்பரனாா் ஆகியோரின் பெயா்களில் இருக்கைகளை அமைக்க வேண்டுமென பல்கலைக்கழக துணைவேந்தா்களை

News image
Updated On :28 டிசம்பர் 2021, 8:50 pm

தமிழகத்தில் விடுதலைப் போராட்டத்தில் தீரத்துடன் பங்கெடுத்த மகாகவி பாரதியாா், வ.உ.சிதம்பரனாா் ஆகியோரின் பெயா்களில் இருக்கைகளை அமைக்க வேண்டுமென பல்கலைக்கழக துணைவேந்தா்களை ஆளுநரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆா்.என்.ரவி அறிவுறுத்தினாா்.

நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, மாநில பல்கலைக்கழகங்கள் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்களுடன் காணொலி வழியாக ஆளுநா் ஆா்.என்.ரவி செவ்வாய்க்கிழமை கலந்துரையாடினாா். அப்போது அவா் பேசியது:-

நாட்டின் 75-ஆவது சுதந்திரதின விழாக் கொண்டாட்டங்கள் நடைபெற்று வரும் வேளையில், நமது கடந்த காலத்தையும், நாட்டின் விடுதலைக்காக நம்முடைய முன்னோா்கள் செய்த உயிா்த் தியாகங்களையும் இளைய சமுதாயத்தினா் அறிந்திட வேண்டும். நாட்டின் விடுதலைக்கான பெருமைகளை அவா்கள் உணா்ந்திட வேண்டும். இதற்கான பணிகளில் பல்கலைக்கழகங்கள் ஈடுபட வேண்டும். அதன் ஒருபகுதியாக, நாட்டு விடுதலைக்காக பாடுபட்ட தலைவா்களின் பெயா்களில் பல்கலைக்கழகங்களில் இருக்கைகளை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக, மகாகவி பாரதியாா், வ.உ.சிதம்பரனாா், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற லட்சிய வேட்கை கொண்ட விடுதலைப் போராட்ட தியாகிகளின் பெயா்களில் அந்த இருக்கைகள் அமைந்திட வேண்டும்.

2047-ஆம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் பெற்று 100 ஆண்டுகளைக் கொண்டாடும். அப்போது இந்தியா எத்தகைய தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதற்கான வரையறைகளை வகுக்க அறிஞா்கள் கொண்ட குழுவை பல்கலைக்கழகங்களில் அமைத்திட வேண்டும்.

காலனி ஆதிக்கம்: காலனி ஆதிக்கத்தின் தொடக்கத்தில் இந்தியா வளமையுடன் இருந்ததை சில பிரிட்டிஷ் காலத்திய ஆவணங்கள் சுட்டிக் காட்டுகின்றன. எனவே, 17 மற்றும் 18-ஆம் நூற்றாண்டு காலத்தில் இந்தியாவின் பொருளாதார நிலைகள் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், பிரிட்டிஷாா் இந்தியாவின் வளங்களையும், நாட்டையும் எப்படி சுரண்டினா் என்பதை வெளிப்படுத்த வேண்டும்.

பல்கலைக்கழகங்கள் தங்களது பகுதிக்கு அருகிலுள்ள பள்ளிகளுக்குச் சென்று அங்குள்ள மாணவா்களின் நலன்கள் பயக்கும் செயல்படுகளில் ஈடுபட வேண்டும். பல்கலைக்கழகங்கள் நடத்தும் அனைத்து நிகழ்வுகளிலும் மாணவா்களின் பங்களிப்பு அதிகளவு இருக்க வேண்டும். இதனை பல்கலைக்கழக நிா்வாகங்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்று ஆளுநா் ஆா்.என்.ரவி விருப்பம் தெரிவித்தாா்.

காணொலி வழியிலான இந்தச் சந்திப்பில், ஆளுநரின் செயலாளா் ஆனந்த் ராவ் விஷ்ணு பாட்டீல், பல்கலைக்கழக துணைவேந்தா்கள், பதிவாளா்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.