மதுரை: மதுரையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அரசு ஊழியர் சங்கத்தினரை காவல்துறையினர் தடுத்த போது இரு தரப்புக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் மறியல் மற்றும் காத்திருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
நான்காவது நாளாக வெள்ளிக்கிழமை அண்ணா பேருந்து நிலையம் எதிரே திருவள்ளுவர் சிலை முன்பாக அரசு ஊழியர் சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து பிற்பகல் ஒரு மணியளவில் அங்கிருந்து ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக வந்தனர். அவர்களை காவல்துறையினர் தடுத்தபோது தடுப்புகளை தள்ளிவிட்டு ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைய முயன்றனர்.
இதையடுத்து காவலர்கள் நுழை வாயில் கதவுகளை மூடி அரசு ஊழியர் சங்கத்தினர் தடுத்தனர். அப்போது காவல்துறையினருக்கும் அரசு ஊழியர் சங்கத்தினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் கீழே விழுந்தனர். பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் ஒருவருக்கு காலில் அடிபட்டது. இதை தொடர்ந்து ஆட்சியர் அலுவலகம் முன்பாக சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்லும் நுழைவாயில்கள் அடைக்கப்பட்டதால் அலுவலகம் செல்வோரும் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியே செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்