

தமிழகத்தில் கடந்த 1990ஆம் ஆண்டு பணியில் சேர்க்கப்பட்ட மக்கள் நலப்பணியாளர்கள் பணியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டனர். பின்னர் மீண்டும் பணி வழங்குவது, நீக்குவது என்று தொடர்ந்து வந்தது.
இதனிடையே மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இதனால் கடந்த 30 ஆண்டுகளாக மக்கள் நலப்பணியாளர்கள் வேலையில்லாமல் பாதிக்கப்படு வருகின்றனர்.
ஆகையால் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கைத் திரும்பப் பெற வேண்டும். மீண்டும் வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி விழுப்புரத்தில் மக்கள் நலப்பணியாளர்கள் வியாழக்கிழமை ரத்தம் விற்கும் போராட்டத்தை அறிவித்தனர்.
இதனையொட்டி விழுப்புரம் பெருந்திட்ட வளாகம் முன் திருச்சி நெடுஞ்சாலையில் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் திருச்சி நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியல் காரணமாக இரு புறங்களிலும் 1 கிலோமீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
காவல்துறையினர் வருவதற்கு கால தாமதம் ஏற்பட்டதால் மறியல் போராட்டம் 1 மணி நேரம் தொடர்ந்தது. வெகு நேரத்துக்குப் பிறகு காவல்துறையினர் வந்து மறியலில் ஈடுகொண்டவர்களைக் கைது செய்து அப்புறப்படுத்தினர். பின்னர் அரை மணிநேரத்துக்குப் பிறகு போக்குவரத்து சீரானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.