

ஆலங்குளத்தில் ஒரேநாள் காய்ச்சலில் 9 மாத குழந்தை உயிரிழந்தது. இப்பகுதியில் டெங்கு பரவுகிறதா என பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
ஆலங்குளம் அண்ணாநகரைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவரது 9 மாத ஆண் குழந்தை சர்வேஸ் வியாழக்கிழமை வயிற்றுப்போக்கால் அவதியடைந்தது. அதற்கு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்த நிலையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு காய்ச்சல் வந்ததாம். மீண்டும் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில் அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில் அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த ஆலங்குளம் காவல்துறை வழக்குப் பதிந்து குழந்தையின் சடலத்தை உடற்கூறு ஆய்வுக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
டெங்குவா? : இதனிடையே ஆலங்குளம் பகுதியில் கடந்த சில தினங்களாக டெங்கு தடுப்பு பரிசோதனைகளை சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் குழந்தையின் மரணம் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, இது குறித்து எங்களுக்குத் தெரியாது எனப் பொறுப்பற்ற முறையில் பதில் அளித்தனர். தொடர்ந்து இப்பகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.