

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையில் காணொலி மூலம் ஒரு நபர் ஆணையத்தில் ஆஜராக நடிகர் ரஜினிகாந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
தூத்துக்குடியில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்திடம் விசாரணை நடத்துவதற்கு ஒரு நபர் விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியது. இந்நிலையில் அவருக்கு எழுத்துப்பூர்வமாக அனுப்பப்பட்ட கேள்விகளுக்கு கடந்த மார்ச் மாதம் ஆணையத்தில் எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்கப்பட்டது.
மேலும் ஜனவரி 19-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என நடிகர் ரஜினிகாந்துக்கு ஒரு நபர் விசாரணை ஆணையம் மூலம் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் நடிகர் ரஜினிகாந்துக்கு பதிலாக அவரது வழக்குரைஞர் இளம் பாரதி ஒரு நபர் விசாரணை ஆணையம் முன்பு செவ்வாய் கிழமை (ஜனவரி 19) நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
தற்போது கரோனா பரவல் தடுப்பு கால பொதுமுடக்கம் அமலில் இருப்பதால் ஒரு நபர் ஆணையத்தில் காணொலி மூலம் விசாரணையில் ஆஜராகி கேள்விகளுக்கு பதில் அளிக்க ரஜினிகாந்த் ஒப்புதல் அளித்துள்ளதாக ஆணையத்தில் மனு தாக்கல் செய்து உள்ளதாக வழக்குரைஞர் இளம்பாரதி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.