புதுச்சேரியில் தேசிய மருத்துவர்கள் தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவில் மருத்துவர்களுக்கு விருதுகளை வழங்கி பாராட்டினார் துணைநிலை ஆளுநர் மருத்துவர் தமிழிசை சௌந்தரராஜன்.
புதுச்சேரி கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரத்துறை சார்பில் நடைபெற்ற விழாவில், துணைநிலை ஆளுநர் மருத்துவர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்று, கரோனா தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கு விருதுகளை வழங்கி பாராட்டினார்.
மருத்துவர்கள் தங்கள் சேவைப் பணியோடு, தங்களது உடலையும் கவனித்துக்கொள்ள வேண்டும், அது அவர்களுக்கும், இந்த சமுதாயத்திற்கு நன்மையாக அமையும் என்று ஆளுநர் அறிவுரை வழங்கினார்.
மருத்துவர் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகளை ஆளுநர் நட்டு வைத்தார்.
விழாவில் சுகாதாரத்துறை செயலர் அருண், சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார், மருத்துவக் கல்லூரி இயக்குனர் உதயகுமார் மற்றும் மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர்.