சிறுவாபுரி முருகன்கோயில் எதிரே ஆக்ரமிப்புகள் அகற்றம்
ஊத்துக்கோட்டை அருகே ஆரணி அடுத்த சிறுவாபுரியில் உள்ள பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவிலின் எதிரே சாலையோரம் ஆக்கிரமிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டது.
பிழைப்பு நடத்த மாற்று இடத்தில் கடைகளை கட்டித் தர வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணியர் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் 6 வாரங்கள் தொடர்ந்து செவ்வாய்க்கிழமைகளில் விளக்கேற்றி வழிபாடு நடத்தினால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
இதனால் இங்கு செவ்வாய்க்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலை மோதி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இதன் காரணமாக கோவிலின் எதிரே சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள பூ மாலை, தேங்காய், கற்பூரம், ஹோட்டல்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கடைகளை அகற்ற நெடுஞ்சாலை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கி இருந்தனர்.
கெடு முடிவடைந்ததையடுத்து 100க்கும் மேற்பட்ட காவல்துறையின் பாதுகாப்புடன் ஜேசிபி இயந்திரங்களுடன் கடைகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் ஆயத்தமாகினர். இதனையடுத்து உரிமையாளர்களே சாலையை ஆக்கிரமித்து போடப்பட்ட கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மேசைகள், மேற்கூரைகள், சிமென்ட் ஓடுகள், ஷட்டர்களை கழற்றி தாங்களாகவே எடுத்துக் கொண்டுச் சென்றனர்.
இதனையடுத்து சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த சுவர்களை ஜேசிபி இயந்திரங்களின் உதவியுடன் அதிகாரிகள் இடித்து அகற்றினர்.
இதனிடையே கடந்த 15ஆண்டுகளாக கோயிலை நம்பியே பூமாலை, கற்பூரம் உள்ளிட்டவற்றை விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வருவதாகவும், மாற்று இடம் ஒதுக்கி தராமல் கடைகளை அப்புறப்படுத்தியுள்ளதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். ஊராட்சி நிர்வாகமோ, கோவில் நிர்வாகமோ தங்களுக்கு கடைகளை கட்டி தர வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றனர்.