நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பரவலாக தொடா்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. மரங்கள் வேரோடு சாய்ந்ததால் பெரும்பாலான சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன் பல்வேறு இடங்களில் மின் விநியோகமும் தடைப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகப் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் புதன்கிழமை இரவில் இருந்து பலத்த மழையாக மாறியுள்ளது. இதில், கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள பகுதிகளிலும், நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது.
மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் அவலாஞ்சியில் அதிகபட்சமாக 156 மி.மீ மழை பதிவாகியுள்ளது. அதேபோல பந்தலூரில் 150 மி.மீ, நடுவட்டத்தில் 137 மி.மீ, அப்பர்பவானியில் 136 மி.மீ, கிளன்மார்கனில் 116 மி.மீ, தேவாலாவில் 103 மி.மீ என மாவட்டத்தில் 6 இடங்களில் மழை அளவு சதமடித்துள்ளது. மேலும் எமரால்டில் 93 மி.மீ, உதகையில் 56 மி.மீ, கூடலூரில் 85 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 1670 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மழையுடன் தொடர்ந்து பலத்த காற்றும் வீசி வருவதால் 100 க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து உள்ளன. இதனால் பல்வேறு இடங்களில் சாலைகளில் விழுந்துள்ள மரங்களின் காரணமாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. அத்துடன் பல்வேறு இடங்களில் மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது. தொடர் மழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக உதகை உள்ளிட்ட பகுதிகளில் கடும் குளிர் நிலவுகிறது.