மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஸ்ரீ வீர அழகர் கோயில் ஆடி பிரம்மோற்சவ விழாவில் ஞாயிற்றுக்கிழமை அழகருக்கு தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.
மானாமதுரை ஸ்ரீ வீர அழகர் கோயிலில் கரோனா பொதுமுடக்கம் கட்டுப்பாடுகள் காரணமாக இந்த ஆண்டு ஆடி பிரம்மோற்சவ விழா ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் ஆடி மாதத்தில் வழக்கமாக திருவிழா நடைபெறும் நாட்களில் வீர அழகருக்கு வழக்கமான பூஜைகள் மட்டும் நடைபெற்று வந்தன.
ஆடி பிரம்மோற்சவ விழா மண்டகப்படிதாரர்கள் பூஜைப் பொருள்களுடன் கோயிலுக்கு வந்து சுவாமிக்கு பூஜைகள் நடத்தி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்களும் கோயிலுக்கு வந்து சமூக இடைவெளியை கடைபிடித்து வீர அழகரை தரிசனம் செய்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஆடிப் பிரம்மோற்சவ விழாவின் நிறைவாக மானாமதுரை பட்டத்தரசி கிராமத்தார் மண்டகப்படியில் வீர அழகர் எழுந்தருளி அங்கு அழகருக்கு தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
இந்தாண்டு திருவிழா ரத்து காரணமாக பட்டத்தரசி கிராமத்தார் பூஜை பொருள்களுடன் கிராமத்திலிருந்து வீர அழகர் கோயிலுக்கு வந்தனர்.
அதன்பின் மண்டகப்படி தாரர்கள் சார்பில் அபிஷேகப் பொருள்களால் சௌந்தரவல்லி தாயார் சன்னதியில் எழுந்தருளியிருந்த உற்சவர் வீர அழகருக்கு அபிஷேகப் பொருள்களால் திருமஞ்சனம் நடைபெற்று அதன்பின் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது.
அதைத்தொடர்ந்து வீர அழகர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பின்னர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது.
கரோனா பொதுமுடக்கக் கட்டுப்பாடுகளால் இரண்டாவது ஆண்டாக மானாமதுரை வீர அழகர் கோயில் ஆடி பிரம்மோற்சவ விழா ரத்து செய்யப்பட்டதால் வழக்கமாக இந்த விழாவின்போது வீர அழகர் மண்டகப்படிகளில் அலங்காரத்துடன் எழுந்தருளி வீதி உலா வருவதை காண முடியாமல் பக்தர்கள் மிகவும் மனவேதனை அடைந்தனர்.