ஜார்க்கண்டிற்கு ஜீப்பில் புறப்பட்ட வடமாநில எஸ்டேட் தொழிலாளர்களை ஆண்டிபட்டி காவல்துறையினர் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.
ஆண்டிபட்டி, வருசநாடு அருகே வெள்ளிமலையில் தனியார் எஸ்டேட் உள்ளது. இங்கு ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உள்பட 14 பேர் வேலை செய்து வந்துள்ளனர். இவர்கள் தங்களது சொந்த மாநிலத்திற்கு திரும்புவதற்காக எஸ்டேட்டுக்குச் சொந்தமான ஜுப்பில் 14 பேரும் ஏறி ஊருக்கு புறப்பட்டனர்.
கடமலைக்குண்டு அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர் வாகனத்தை தடுத்து நிறுத்தினர். பின்னர் தொழிலாளர்களிடம் ஆண்டிபட்டி வட்டாட்சியர் சந்திர சேகர் பேச்சுவார்த்தை நடத்தி, அனுமதி வந்தவுடன் ஊருக்கு அனுப்பி வைக்கப்படும், எஸ்டேட் நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி நிலுவை சம்பளத் தொகை தர நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து, வடமாநிலத் தொழிலாளர்கள் எஸ்டேட்டிற்கு திரும்பிச் சென்றனர்.