மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வைகை ஆற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்புவனம் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் கிருபாகரன், இவருக்கு ரம்யா என்ற மனைவியும் சோலையாண்டி என்ற சோலைநிதிஷ் (14) என்ற மகன் உள்பட மூன்று ஆண் பிள்ளைகள் உள்ளனர்.
சோலைநிதிஷ் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். புதன்கிழமை காலை நண்பர்களுடன் திருப்புவனம் வைகை ஆற்றில் குளிக்க சென்றார். வைகை ஆற்றினுள் மதுரை நகரின் கழிவு நீர் உள்பட மழை தண்ணீர் சென்றவாறு உள்ளது.
வைகை ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சிறுவனை தேடும் பணி.
இதில் வைகை ஆற்றில் இடிந்த பாலத்தின் மேல் இருந்து நண்பர்களுடன் குதித்து விளையாடிக் கொண்டிருந்த சோலைநிதிஷ் நீரின் வேகத்தால் உள்ளே இழுக்கப்பட்டு உடைந்த பாலத்தின் அடியில் போய் சிக்கி கொண்டான், உடன் இருந்த நண்பர்கள் தண்ணீரில் தேடியும் கிடைக்கவில்லை.
இதனையடுத்து திருப்புவனம் இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையில் போலீசாரும், மாவட்ட தீயணைப்பு நிலைய அலுலர் சத்ய கீர்த்தி, மானாமதுரை தீயணைப்பு நிலைய அலுவலர் குமார் உள்ளிட்டோருக்கும் தகவல் கொடுக்கப்பட்டு வைகை ஆற்றின் உள்ளே இறங்கி தேடி வருகின்றனர்.
நீரின் வேகத்தை தடுக்க பொக்லைன் இயந்திரம் மூலம் அணை கட்டியும் வெளியேறிய தண்ணீர் மீண்டும் உள்ளே வந்ததால் உடலை மீட்க முடியவில்லை. காலை பத்து மணிக்கு சிக்கி கொண்ட சிறுவனின் உடலை மதியம் இரண்டு மணி வரை மீட்க முடியவில்லை. தொடர்ந்து போலீசாரும், தீயணைப்பு துறையினரும் உடலை மீட்க முயற்சித்து வருகின்றனர்.