முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி

முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் ஆர்.காமராஜ் ஆகியோருக்கு எதிராக சட்டப்பேரவைத் தலைவர் தொடர்ந்த வழக்குகளை திரும்பபெற அனுமதியளித்த உயர்நீதிமன்றம், வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
உயர்நீதிமன்றம்
உயர்நீதிமன்றம்

முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் ஆர்.காமராஜ் ஆகியோருக்கு எதிராக சட்டப்பேரவைத் தலைவர் தொடர்ந்த வழக்குகளை திரும்பபெற அனுமதியளித்த உயர்நீதிமன்றம், வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் திமுக எம்எல்ஏ அப்பாவு தாக்கல் செய்த மனுவில், தமிழக கிராமங்களில் உள்ள தெரு விளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் ரூ.500 கோடி வரை முறைகேடு நடந்துள்ளது. இதுதொடர்பாக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக புகார் அளித்தும், லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப்பதிவு செய்யவில்லை.

எனவே அமைச்சர் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யவும், அதற்கு ஆளுநரிடம் ஒப்புதல் பெறவும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். அதே போல அவர் தாக்கல் செய்த மற்றொரு மனுவில், கரோனா பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்த பொதுமக்களுக்காக குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் தலா 5 கிலோ அரிசி வழங்க மத்திய அரசு உத்தரவிட்டது.

ஆனால் மத்திய அரசு உத்தரவின்படி குடும்ப உறுப்பினர்களுக்கு தலா 5 கிலோ அரிசி வழங்குவதற்ககுப் பதில், குடும்ப அட்டைக்கு 5 கிலோ அரிசி மட்டுமே தமிழகத்தில் வழங்கப்பட்டது. எஞ்சிய அரிசியை உணவுத்துறை அமைச்சர் காமராஜூக்கு நெருக்கமானவர்களின் அரிசி ஆலைக்குக் கொண்டு சென்று பாலீஷ் செய்து பெரும் தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் புகார் அளித்தேன். ஆனால் இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை. எனவே எனது புகாரின் அடிப்படையில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். மேலும் பொது ஊழியர்களுக்கு எதிரான லஞ்ச புகாரின் மீது வழக்குப்பதிவு செய்ய பொதுத்துறை செயலாளரின் ஒப்புதலை பெறவேண்டும் என கடந்த 2018-ஆம்ஆண்டு பிறப்பிக்கப்பட்ட தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்ய கோரி, தனியாக ஒரு வழக்கையும் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில், முன்னாள் அமைச்சர் வேலுமணி மீதான புகார் குறித்து லோக் ஆயுக்தா விசாரணைக்கு அனுப்பியுள்ளதாகவும், முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான புகாரை விரிவாக விசாரித்த தலைமை செயலாளர் புகாரில் அடிப்படை முகாந்திரம் எதுவும் இல்லை என முடிவெடுத்து புகாரை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த மூன்று வழக்குகளும்  தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பேரவைத் தலைவர் அப்பாவு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், 3 வழக்குகளையும் திரும்பப் பெற்றுக் கொள்வதாக தெரிவித்தார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் மனுவை திரும்பப் பெற அனுமதியளித்து 3 வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com