

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிவசங்கர் பாபா குணமடைந்ததையடுத்து மீண்டும் இன்று சிறையில் அடைக்கப்படவுள்ளார்.
தனது பள்ளியில் படிக்கும் மாணவிகளை பாலியல் தொந்தரவு செய்ததாக எழுந்த புகாரில் சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த சிபிசிஐடி காவல்துறையினர், தில்லி அருகே ஜூன் 16ஆம் தேதி கைது செய்தனர்.
அதன்பின் சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், நோயிலிருந்து குணமடைந்த சிவசங்கர் பாபாவை மீண்டும் சிறையில் அடைக்க காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.
இதற்கிடையே, சிவசங்கர் பாபாவை 10 நாள்கள் காவலில் எடுக்க நீதிமன்றத்தில் சிபிசிஐடி காவல்துறையினர் மனு அளித்துள்ளனர்.
சென்னை சுஷில்ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது பள்ளி மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அதனடிப்படையில் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நேரடியாக விசாரணை நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபா உள்ளிட்ட சிலர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனிடையே டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிவசங்கர் பாபாவை விசாரிக்க சென்னை சிபிசிஐடி தனிப்படையினர் விரைந்த நிலையில் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இந்நிலையில், மருத்துவமனையில் இருந்து தப்பி தில்லி வந்து காசியாபாத் பகுதியில் பதுங்கியிருந்த சிவசங்கர் பாபாவை கைது செய்த காவல்துறையினர் ஜூன் 16ஆம் தேதி இரவு சென்னை அழைத்து வந்தனர்.
இதையடுத்து செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சிவசங்கர் பாபாவுக்கு 15 நாள்கள் நீதிமன்றக் காவல் அளிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.