டெல்டா பிளஸ் தொற்றுக்கு எதிரான நோய் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும்: சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவு

கரோனா டெல்டா பிளஸ் வைரசுக்கு எதிரான நோய் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என மாவட்டங்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன்
மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன்


கரோனா டெல்டா பிளஸ் தொற்றுக்கு எதிரான நோய் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என மாவட்டங்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் இதுவரை 51 பேருக்கு கரோனா டெல்டா பிளஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 9 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும்,  தொற்று பாதித்த அனைவரும் நலமுடன் இருப்பதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், டெல்டா பிளஸ் தொற்று தொடர்பாக மாவட்ட சுகாதாரத் துறை சார்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், கரோனோ வைரஸ் உருமாற்றம் அடைந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக டெல்டா பிளஸ் வகை கரோனோ தொற்று பாதிப்புகள் தமிழ்நாட்டில் கண்டறியப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் தற்போது கண்டறியப்பட்ட டெல்டா பிளஸ் வகை கரோனோ பாதிப்புகள் குறித்த ஆய்வில் நோய் பரவும் தன்மை, கடும் நுரையீரல் பாதிப்பு, நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் ஆகியவை அதிகயளவில் கண்டறியப்பட்டுள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள், மாவட்ட நிர்வாகங்கள் உடனடியாக டெல்டா பிளஸ் வகை கரோனோ பாதிப்புகளுக்கு எதிரான நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.

குறிப்பாக டெல்டா பிளஸ் வகை பாதிப்புகள் கண்டறியப்பட்டவர்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும், ஏதேனும் அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் உடனடியாக அவர்களுக்கு தேவையான மருத்துவச் சிகிச்சைகள் வழங்க வேண்டும். நோய் பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த குடும்ப உறுப்பினர்கள், அவரது தொடர்பாளர்களை உடனடியாக கண்டறிந்து தொற்று தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நோயாளி தொடர்பாளர்களுக்குப் பரிசோதனை மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்த வேண்டும். மாவட்ட வாரியாக உருமாற்றம் அடைந்த புதிய பாதிப்புகள் கண்டறியப்படும் பட்சத்தில் உடனடியாக சுகாதாரத் துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com