போடி: போடியில், செவ்வாய் கிழமை, தி.மு.க. கொடிக் கம்பங்கள் மற்றும் டிஜிட்டல் போர்டுகளை அகற்ற வலியுறுத்தி அ.தி.மு.க. இளைஞரணியினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததையடுத்து போடியில் அனைத்துக் கட்சிக் கொடிக் கம்பங்கள், டிஜிட்டல் பேனர்கள் அகற்றப்பட்டு வருகின்றன.
போடி பெருமாள் கோவில் அருகே தி.மு.க. வடக்கு மாவட்ட கட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் முன்பாக தி.மு.க. கொடிகள், கொடிக் கம்பம், டிஜிட்டல் லைட்டிங் போர்டு ஆகியவை வைக்கப்பட்டிருந்தன.
இதையும் படிக்கலாமே.. தேர்தல் நடத்தை விதிகள் - பொது விதிமுறைகள்
இவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு அ.தி.மு.க.வினர் போடி நகர் காவல் நிலையத்தில் மனு அளித்திருந்தனர். மற்ற பகுதிகளில் தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சியின் கொடிக் கம்பங்கள் அகற்றப்பட்டாலும், தி.மு.க. மாவட்ட அலுவலகம் முன் அமைக்கப்பட்டிருந்த கொடிக் கம்பம் உள்ளிட்டவை அகற்றப்படாமல் இருந்தது.
இவற்றை உடனே அகற்ற வலியுறுத்தி அ.தி.மு.க. இளைஞரணியினர் பெருமாள் கோவில் முன்பாக அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த போடி நகர் காவல் நிலைய போலீஸார் அவர்களை சமாதானப்படுத்தியதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.