வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே இலங்கைக்குக் கடத்திச் செல்ல ஆம்புலன்ஸ் வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 28 கிலோ கஞ்சா மூட்டைகள் இன்று காலை (மார்ச் 2) பறிமுதல் செய்யப்பட்டது.
கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனத்தை பறிமுதல் செய்த கியூ பிரிவு காவல்துறையினர், 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிக்கலாமே.. தேர்தல் நடத்தை விதிகள் - பொது விதிமுறைகள்
காவலர்களுக்குக் கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கியூ பிரிவு டிஎஸ்பி சிவசங்கரன், ஆய்வாளர் அருள் பிரசாத் உள்ளிட்ட கியூ பிரிவு காவலர்கள் வேதாரண்யம் தோப்புத்துறை கடற்கரை சாலையில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, இன்று அதிகாலை அவ்வழியாக வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை நிறுத்தி சோதனையிட்ட போது 28 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சென்னை ஐயப்பன் நகர் ராஜ்குமார் (46), அயனாவரம் மகேந்திரன் (24), வில்லிவாக்கம் விக்னேஷ் (26) தங்கையர் பேட்டை சுந்தர் (36) ஆகிய நால்வரையும் நாகை கியூ பிரிவு காவலர்கள் கைது செய்து விசாரிக்கின்றனர்.