அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியில் ஸ்ரீஆதிநாராயணன் சாமி கோவிலில்,மதுரை சிவகுக கைங்கர்ய ஸ்தாபகத்தினர் சார்பில், அனைத்து பங்காளிகள் ஒருங்கிணைப்பில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம், பாளையம்பட்டியில் உள்ள ஸ்ரீஆதிநாராயணன் சாமி கோவிலில் உடன் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீசீலைக்காரி வீரசின்னம்மாள், தலைமைக் காவல் ஸ்ரீமாடசாமி ஆகிய தெய்வங்களுக்கும் சேர்த்து சிறப்பு குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.
முன்னதாக முதல்நாளான செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிக்கு விக்னேஸ்வரக பூஜையுடன் தொடங்கிய இவ்விழாவில், அன்று மாலை தேவதா அனுக்ஞை, வாஸ்து சாந்தி, ப்ரவேசபலி உள்ளிட்ட பல்வேறு பூஜைகளுடன் முதல்கால யாகசாலை பூஜையும் தொடர்ந்து தீப,தூப ஆராதனைகளும் நடைபெற்றன.
அதையடுத்து புதன்கிழமை காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை உள்ளிட்ட அனைத்து பூஜைகளுடன் ஸ்ரீஆதிநாராயணன் கோவில் கோபுர கலசம் உள்ளிட்ட 21 பந்தி தெய்வங்களுக்குமாகச் சேர்த்து மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதையடுத்து விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டதுடன் சிறப்புப் பிரசாதங்கள் வழங்கப்பட்டு அன்னதானமும் நடைபெற்றது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை மதுரை சிவகுக கைங்கர்ய ஸ்தாபகத்தினரும், பாளையம்பட்டி சுந்தரம் பிள்ளை குடும்பத்தாரும், சின்னமனூர் சுருளி குடும்பத்தினரும் மதுரை மற்றும் தேனி அருகே சீலையம்பட்டி பங்காளிகள் உள்ளிட்ட அனைவரும் இணைந்து செய்திருந்தனர். ஒருங்கிணைப்புகளை பாளையம்பட்டி சுந்தர்ராஜன் செய்திருந்தார்.