சென்னை: கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளுக்கு முரணாக மெரீனாவில் கட்டப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் சமுக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த பொதுநல மனுவில், சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதா சமாதியில், அவரது நினைவிடம் கட்டப்பட்டு, கடந்த ஜனவரி மாதம் திறக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் விதிகளின் படியும், உயர்நீதிமன்ற உத்தரவுகளின் படி கடற்கரை இடத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் எந்த வித கட்டுமானங்களை மேற்கொள்ள கூடாது.
எனவே, இந்த நினைவிடத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரிய தனது மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்கும்படி, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், சென்னை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பையா, சத்திகுமார் சுகுமார குருப் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில் ஜெயலலிதா நினைவிடம் கட்ட தடை கோரிய வழக்குகளை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு ஏற்கனவே தள்ளுபடி செய்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொள்ள முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.