சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியிலுள்ள காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு காலை 11 மணிக்கு தொகுதிகள் இறுதி செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் 25 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 6 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
அதிமுகவில் கூட்டணி கட்சிகளுக்கு போட்டியிடும் தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், இன்று திமுக தனது கூட்டணிகளுக்கு தொகுதிகளை இறுதி செய்யவுள்ளது.
திமுக கூட்டணியில் ஏற்கெனவே மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ஆதி தமிழா் பேரவை, மக்கள் விடுதலைக் கட்சி ஆகிய கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதேபோன்று திமுக முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலும் இன்று வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 25 தொகுதிகளும், மதிமுக, மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா 3 தொகுதிகளும், மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, ஆதித் தமிழா் பேரவை, மக்கள் விடுதலைக் கட்சி, அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.