கும்மிடிப்பூண்டி: 62 சாதிகளுக்கு 22% இட ஒதுக்கீடு இருந்த நிலையில் அதில் 10.5 சதவீதத்தை வன்னியர்களுக்கு தமிழக அரசு தந்ததால் தாங்கள் பெரிதும் கல்வி வேலைவாய்ப்பில் பாதிக்கப்படுவதாக கூறிய மீனவ சமுதாயத்தினர் தங்களுக்கு தனி இடஒதுக்கீடை பெற்று தர தங்கள் கோரிக்கையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவிக்க வேண்டும் என கும்மிடிப்பூண்டி பகுதி மீனவ கிராமத்தினர் திமுக வேட்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜனிடம் தேர்தல் பிரசாரத்தின் போது தெரிவித்தனர்.
கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் கி.வேணு தலைமையில் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் ஊராட்சியில் பாட்டைகுப்பம், நொச்சிக்குப்பம், பெத்தானியா குப்பம், வெங்கடேச பெருமாள் நகர் குப்பம் ஆகிய 4 மீனவ கிராமங்களில் வாக்கு சேகரிப்பை தொடங்கினார்.
அப்போது பாட்டைகுப்பம் கிராம மக்கள் படகுதுறை வசதியையும், நொச்சிகுப்பம் கிராம மக்கள் சாலை வசதியையும்,அரசு பள்ளி தரம் உயர்த்தலையும் கேட்டனர்.
மேலும் மீனவ கிராம பிரதிநிதிகள் திமுக வேட்பாளரிடம் வன்னியர்களோடு சேர்த்து தங்களுக்கும் 22 சதவீத இடஒதுக்கீடு இருந்தநிலையில் அதில் 10.5சதவீதத்தை வன்னியர்களுக்கு அரசு ஒதுக்கிய நிலையில் மீதமுள்ளொ 11.5 சதவீதத்தில் மீனவர்கள் உள்ளிட்ட 48 சாதியினர் கல்வி, வேலைவாய்ப்பில் போராடும் நிலை ஏற்பட்டுள்ளதால், மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்பட மீனவர்களுக்கும் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து இதனை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவிக்க கேட்டுக் கொண்டனர்.
வாக்கு சேகரிப்பின்போது திமுக நிர்வாகிகள் ஜி.மனோகரன், பா.செ.குணசேகரன், திருமலை, பாஸ்கரன், காங்கிரஸ் நிர்வாகி சம்பத், மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகி துளசி நாராயணன், இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகி அருள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.