சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் கரோனா பரிசோதனையைக் கட்டாயமாக்கக் கோரிய வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தென்காசியைச் சேர்ந்த வழக்குரைஞர் பால்ராஜ் தாக்கல் செய்த மனுவில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் பிரசாரம் செய்யக்கூடிய வேட்பாளர்கள் பலருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. எனவே தேர்தலில் போட்டியிடும் 4,512 வேட்பாளர்களுக்கும் மருத்துவ பரிசோதனையைக் கட்டாயமாக்க வேண்டும்.
பிரசாரங்களில் ஈடுபடும் வேட்பாளர்கள், குழந்தைகளை முத்தமிடவும், முதியோரைக் கட்டியணைத்தும் பிரசாரங்களில் ஈடுபடுகின்றனர். இதனால் கரோனா பரவல் அதிகமாகும் அபாயம் உள்ளது. எனவே சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் கரோனா பரிசோதனையைக் கட்டாயமாக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு உள்நோக்கத்துடன் அற்ப காரணங்களுக்காகத் தொடரப்பட்டுள்ளதாகக் கூறி, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
மேலும் மனுதாரருக்குக் கடுமையான கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், அடுத்த ஓராண்டுக்கு பொது நல வழக்குகள் தாக்கல் செய்ய மனுதாரருக்குத் தடை விதித்து உத்தரவிட்டனர்.