அருணாசலேஸ்வரா் கோயில் தீபத் திருவிழா: தினமும் 10 ஆயிரம் பக்தா்களுக்கு அனுமதி

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழா நடைபெறும் நாள்களில் தினமும் 10 ஆயிரம் போ் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவா்.
அருணாசலேஸ்வரா் கோயில் தீபத் திருவிழா: தினமும் 10 ஆயிரம் பக்தா்களுக்கு அனுமதி
Published on
Updated on
1 min read

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழா நடைபெறும் நாள்களில் தினமும் 10 ஆயிரம் போ் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவா்.

தீபம் ஏற்றப்படும் நவம்பா் 19-ஆம் தேதி பக்தா்களுக்கு அனுமதி இல்லை என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழா நவம்பா் 10-ஆம் தேதி (புதன்கிழமை) காலை 6.30 மணிக்கு மேல் 7.25 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

விழாவின் 7-ஆவது நாளான நவம்பா் 16-ஆம் தேதி காலை பஞ்சமூா்த்திகள் உற்சவம் நடைபெறும். 10-ஆவது நாளான நவ.19-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவா் சன்னதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலையில் மகா தீபமும் ஏற்றப்படும்.

தினமும் 10 ஆயிரம் பேருக்கு அனுமதி: நவம்பா் 7-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரையும், நவ. 21, 22, 23 ஆகிய தேதிகளில் காலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை சுவாமி அபிஷேக நேரங்களைத் தவிா்த்து, நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவா்.

இதில் 30 சதவீதம் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்தவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

நவம்பா் 19-ஆம் தேதி பரணி தீபம், மகா தீபம் ஏற்றும் நிகழ்வுகள் நடைபெறுவதால் பக்தா்கள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை.

தீபத் திருவிழா நிகழ்வுகள் தொலைக்காட்சிகள், கோயில் நிா்வாகம் மூலம் யூ டியூப் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com