கரோனா பணியில் ஈடுபட்டோருக்கு ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்

கரோனா பெருந்தொற்றின்போது பணியிலிருந்த சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஊக்கத்தொகை வழங்கினார்.
கரோனா பணியில் ஈடுபட்டோருக்கு ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்
கரோனா பணியில் ஈடுபட்டோருக்கு ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்

கரோனா பெருந்தொற்றின்போது பணியிலிருந்த சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஊக்கத்தொகை வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  இன்று (3.11.2021) தலைமைச் செயலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கோவிட் பெருந்தொற்றுப் பணியில் ஈடுபட்ட 24,908 மருத்துவ அலுவலர்கள், 26,615 செவிலியர்கள், 6,791 சுகாதார ஆய்வாளர்கள், 8,658 கிராம சுகாதார செவிலியர்கள், 6,083 ஆய்வக தொழில் நுட்பனர்கள் மற்றும் 32,113 இதர பணியாளர்கள் என மொத்தம் 1,05,168 பணியாளர்களுக்கு 196.91 கோடி ரூபாய் ஊக்கத்தொகை வழங்கிடும் அடையாளமாக, 13 பணியாளர்களுக்கு ஊக்கத்தொகைக்கான காசோலையை வழங்கினார்.

கோவிட்-19 பெருந்தொற்று தடுப்புப்பணிகளில் கடந்த ஏப்ரல், மே மற்றும் ஜூன் ஆகிய மூன்று மாதங்களில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறையைச் சார்ந்த 34,396 நபர்கள், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறையைச் சார்ந்த 13,371 நபர்கள், மருத்துவக்கல்வி துறையைச் சார்ந்த 49,908 நபர்கள், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையைச் சார்ந்த 270 நபர்கள்,
மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் (தொழிலாளர் அரசு ஈட்டுறுதி திட்டம்) துறையைச் சார்ந்த 962 நபர்கள், தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டத்தைச் சார்ந்த 6,261 நபர்கள், என மொத்தம் 1,05,168 பணியாளர்கள் பணியாற்றி வந்தனர்.

2021 ஏப்ரல், மே மற்றும் ஜூன் ஆகிய மூன்று மாதங்களில் கோவிட்-19 பெருந்தொற்று தடுப்புப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த அரசுப் பணியாளர்கள் மற்றும் ஒப்பந்தப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார்கள்.

அந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக, பொது சுகாதாரம் மற்றும் நோய்
தடுப்பு மருந்துத் துறைக்கு 65 கோடியே 11 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறைக்கு 28 கோடியே 19 இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய், மருத்துவக்கல்வி துறைக்கு 91 கோடியே 69 இலட்சத்து 65 ஆயிரத்து 962 ரூபாய், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறைக்கு 55 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறைக்கு (தொழிலாளர் அரசு ஈட்டுறுதி திட்டம்) 1 கோடியே 96 இலட்சத்து 5 ஆயிரம் ரூபாய், தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டத்திற்கு 9 கோடியே 39 இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய், என மொத்தம் 1,05,168 பணியாளர்களுக்கு 196 கோடியே 91 இலட்சத்து 65 ஆயிரத்து 962 ரூபாய் ஊக்கத்தொகை வழங்க தமிழ்நாடு அரசு 26.10.2021 அன்று அரசாணை வெளியிட்டது.

அதன்படி, கோவிட் பெருந்தொற்றுப் பணியில் பணிபுரிந்த 1,05,168 பணியாளர்களுக்கு ஊக்கத்தொகைக்கான காசோலையை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று வழங்கி தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர்.ஜெ.ராதாகிருஷ்ணன், இந்திய மருத்துவம்மற்றும் ஓமியோபதி இயக்குநர் எஸ்.கணேசன், தமிழ்நாடு சுகாதார திட்டம், திட்ட இயக்குநர் டாக்டர் எஸ்.உமா, மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் ஆர்.நாராயணபாபு, பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து இயக்குநர் டாக்டர் டி.எஸ்.செல்வவிநாயகம், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் டாக்டர் எஸ்.குருநாதன் மற்றும் அரசு உயர்  அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com