மானாமதுரை: வைகை அணையிலிருந்து திறந்து விடப்பட்ட உபரித் தண்ணீர் வெள்ளிக்கிழமை சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை கடந்து ராமநாதபுரம் மாவட்டத்தை நோக்கி பயணித்தது.
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. இதனால் இரவு பகலாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணை முழு கொள்ளளவான 71 அடியை நெருங்கி வருகிறது.
இதையடுத்து வைகை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வைகை அணையிலிருந்து உபரித் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. தேனி, மதுரை மாவட்டங்களை கடந்து இந்தத் தண்ணீர் கடந்த வியாழக்கிழமை மாலை சிவகங்கை மாவட்ட எல்லையான திருப்புவனம் பகுதிக்கு வந்தடைந்தது.
அதைத்தொடர்ந்து வெள்ளிக்கிழமை காலை வைகை உபரித் தண்ணீர் மானாமதுரையைக் கடந்து ராமநாதபுரம் மாவட்ட எல்கையை நோக்கி பயணித்தது.
மானாமதுரை அருகேயுள்ள கட்டிக்குளம் கண்மாய்க்கு கால்வாயில் செல்லும் தண்ணீர்
ஏற்கனவே மானாமதுரை, திருப்புவனம் பகுதி வைகை ஆற்றில் மழை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வரும் நிலையில் தற்போது வைகைத் தண்ணீரும் சேர்ந்து செல்வதால் ஆற்றின் இரு கரைகளையும் தொட்டு தண்ணீர் பாய்கிறது.
இதையும் படிக்க | திருப்பூர்: தண்ணீருக்கு அதிகாரிகளிடம் பிச்சை கேட்கும் விவசாயிகள்
மேலும் திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி ஒன்றியங்களில் வைகை ஆற்றை ஒட்டியுள்ள பாசன கால்வாய்கள் திறக்கப்பட்டு அதில் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இதனால் மேற்கண்ட ஒன்றியங்களில் உள்ள அனைத்து பாசன கண்மணிகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.
ஏற்கனவே மழை காரணமாக இப்பகுதிகளில் பல கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாய்ந்து வரும் நிலையில் தற்போது வைகைத் தண்ணீரின் வரத்து காரணமாக நிரம்பாத மேலும் பல கண்மாய்கள் இன்னும் ஒரு சில நாள்களில் நிரம்பி விடும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.