மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் அதிமுக ஒன்றிய குழு உறுப்பினர் திமுகவில் இணைந்தார். இதையடுத்து இக் கட்சியின் பலம் 9 ஆக உயர்ந்துள்ளது. இதனால் மேலும் சில அதிமுக ஒன்றியக் குழு உறுப்பினர்களை கட்சியில் இணைத்து தலைவர் பதவியைக் கைப்பற்ற திமுக திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலின் போது இளையான்குடி ஒன்றியத்தில் உள்ள மொத்தம் 16 ஒன்றிய கழு உறுப்பினர்கள் பதவிகளில் 9 இடங்களை அதிமுக கைப்பற்றி இளையான்குடி ஒன்றியத் தலைவர் பதவியை கைப்பற்றியது.
தற்போது அக்கட்சியின் முனியாண்டி தலைவராக பதவியில் உள்ளார். ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் இளையான்குடி ஒன்றியத் தலைவர் பதவியை கைப்பற்ற திமுக திட்டமிட்டு அதற்காக களமாடி வருகிறது.
இதையும் படிக்க | உத்தமபாளையம் அருகே வயதான தம்பதி கழுத்தறுத்து கொலை
ஏற்கனவே அதிமுகவைச் சேர்ந்த ஒன்றிய குழு உறுப்பினர் பெரும்பச்சேரி முருகன் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார். இதனால் இளையான்குடி ஒன்றியத்தில் திமுகவின் ஒன்றிய குழு உறுப்பினர்களின் பலம் 8 ஆக அதிகரித்தது.
தற்போது மேலும் ஒரு அதிமுக ஒன்றிய குழு உறுப்பினரான வடக்கு அண்டக்குடியைச் சேர்ந்த சண்முகம் திமுகவில் இணைந்துள்ளார். திமுக மாவட்ட செயலாளரும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சருமான கே. ஆர். பெரியகருப்பன் முன்னிலையில் அவர் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் தென்னவன், மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினர் தமிழரசி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் சுப. மதியரசன் எஸ்.மாரியப்பன் கென்னடி, கண்ணமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் சுப. தமிழரசன், திமுக மாவட்ட துணைச் செயலாளர்கள் த.சேங்கைமாறன், கே. எஸ். எம். மணிமுத்து உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தற்போது சண்முகம் திமுகவில் இணைந்தையடுத்து இளையான்குடி ஒன்றியத்தில் திமுக ஒன்றிய குழு உறுப்பினர்கள் பலம் 9 ஆக உயர்ந்துள்ளது. அதிமுகவின் பலம் 7 ஆக குறைந்துள்ளது. இதனால் அக்கட்சியினர் அதிர்ச்சியில் உள்ளனர்.
இதையும் படிக்க | திருப்பூர்: தண்ணீருக்கு அதிகாரிகளிடம் பிச்சை கேட்கும் விவசாயிகள்
தலைவர் பதவியைக் கைப்பற்ற திட்டமா? இளையான்குடி ஒன்றியத் தலைவர் பதவியைக் கைப்பற்ற திட்டமிட்டு செயல்பட்டுவரும் திமுகவினர் இளையான்குடி ஒன்றியத்தில் மேலும் சில அதிமுக ஒன்றிய குழு உறுப்பினர்களை திமுகவில் இணைக்க திட்டமிட்டு காய் நகர்த்தி வருகின்றனர்.
இன்னும் சில நாட்களுக்குள் அதிமுகவைச் சேர்ந்த சில ஒன்றியக் குழு உறுப்பினர்கள் திமுகவில் இணைவார்கள். அதன் பின்னர் இளையான்குடி ஒன்றிய தலைவர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்து தலைவர் பதவியை கைப்பற்ற திட்டமிட்டுள்ளோம் என திமுகவினர் தெரிவித்தனர்.