சென்னை: கார்த்திகை மாத தீபத் திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலின் கிரிவலப் பாதையில் 20 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் பரணி தீபத் திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக, கோயில் மற்றும் கிரிவலப் பாதையில் பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதை எதிர்த்து, திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அனைத்து பக்தர்களையும் அனுமதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு இன்று பதில் மனுவை தாக்கல் செய்தது.
கரோனா முன்னெச்சரிக்கை காரணமாக, திருவண்ணாமலை கோயிலுக்குள் நாளை பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
கிரிவலப்பாதையில் மொத்தமாக 20 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்கலாம். அதில் உள்ளூர் பக்தர்கள் 5 ஆயிரம் பேரும், வெளியூர் பக்தர்கள் 15 ஆயிரம் பேருக்கும் அனுமதி வழங்கப்படலாம். பரணி தீபத்தின் போது, கட்டளைதாரர்கள் 300 பேருக்கு அனுமதி வழங்கலாம் என்று தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.