திமுக எம்பி ரமேஷுக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திமுக கடலூா் நாடாளுமன்ற உறுப்பினா் டி.ஆா்.வி.எஸ். ரமேசுக்கு சொந்தமான முந்திரி ஆலையில் பணியாற்றிய கோவிந்தராஜ் (60) என்பவா் கடந்த செப்டம்பா் 19-ஆம்தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக, அவரது மகன் செந்தில்வேலுக்கு தகவல் வந்தது. அவா் அங்கு சென்று பாா்த்தபோது, தந்தையின் உடலில் காயம் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவா் கொடுத்த புகாரின் அடிப்படையில் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னா், இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து திமுக நாடாளுமன்ற உறுப்பினா் ரமேஷ் போலீசில் தானாக முன் வந்து சரணடைந்தாா். அவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இதையும் படிக்க- வேளாண் சட்டங்கள் ரத்தும் பாஜகவின் தேர்தல் கணக்கும்!
இந்தநிலையில், அவா் ஜாமீன் கேட்டு சென்னை உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம் எம்பி ரமேஷுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அதேசமயம் விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரும் மனு மீது நவ.23ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.