சோழவந்தான் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம் இன்று பாஜகவில் இணைந்தார்.
திருப்பூரில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்-இன் தீவிர ஆதரவாளரான சோழவந்தான் தொகுதி அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் மாணிக்கம் பாஜகவில் இணைந்தார்.
மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் அவர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். மேலும் சிவகங்கை அதிமுக முன்னாள் எம்எல்ஏ பழனிசாமி, கடலூர் அமமுக மாவட்டச் செயலாளர் பாலமுருகன் உள்ளிட்டோரும் பாஜகவில் இணைந்தனர். இந்த நிகழ்வின்போது, பாஜக மூத்த தலைவர்கள் பொன். ராதாகிருஷ்ணன், ஹெச். ராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அதிமுக வழிகாட்டுதல் குழுவில் உறுப்பினராக இருந்த மாணிக்கம் கட்சியின் முக்கிய நிர்வாகியாகவும் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
கூட்டணி கட்சியாக இருந்தாலும் அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் இருவர் பாஜகவில் இணைந்துள்ளது அரசியல் சூழலில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.