தமிழகத்தில் புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாகப்பட்டினம், நெல்லை, தூத்துக்குடி ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும். இது மேலும் மேற்கு வடமேற்கு திசையில் நகா்ந்து வரும் நாள்களில் தமிழக கடலோர கரையை நோக்கி நகரக்கூடும்.
இதன் காரணமாக நவ. 24 (வியாழக்கிழமை) அன்று புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாகப்பட்டினம், நெல்லை, தூத்துக்குடி ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக் கூடும் என்று கூறியுள்ளது.
ஏற்கெனவே நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.