கம்பம்: தேனி மாவட்டம் கூடலூரில் செவ்வாய்க்கிழமை பலத்த கனமழை பெய்ததால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.
தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்தது. இதனால் திண்டுக்கல் குமுளி சாலையில் உள்ள மழைநீர் வடிகால்கள் நிரம்பி மழை வெள்ளத்துடன் கழிவுநீரும் சேர்ந்து பிரதான சாலை மற்றும் 17வது வார்டு ராஜீவ் காந்தி நகர் பகுதிக்குள் சென்றது.
ராஜீவ்காந்தி நகரில் தாழ்வான தெருக்களில் உள்ள வீடுகளுக்குள்ளும் மழைநீர் சென்றதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். வயதான பெரியவர்களையும், குழந்தைகளையும் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றனர்.
நுகர்வோர் அமைப்பைச் சேர்ந்த முருகன் என்பவர் கூறும்போது, 'வடகிழக்கு பருவமழை எதிரொலியாக மழைநீர் வெள்ளம் ஏற்படும் காலங்களில், வாறுகால், வடிகால்களை தூர்வாராத காரணத்தினால் மழை வெள்ளம் தாழ்வான பகுதிகளுக்குள் சென்று வீடுகளுக்குள் புகுந்துவிடுகிறது. நகராட்சி நிர்வாகம் உடனடியாக இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதேபோல் கம்பம் நகர் பகுதியிலும் சுமார் 25 நிமிடங்கள் பலத்த மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.