திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த நகர்மன்ற முன்னாள் தலைவர் சிவா.ராஜமாணிக்கத்தை அதிமுக மாநில அமைப்புச் செயலராக நியமித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் கூட்டாக, திங்கள்கிழமை அறிவித்தனர்.
பாராம்பரியம் மிக்க காங்கிரஸ் குடும்பத்தை சேர்ந்தவர் சிவா.ராஜமாணிக்கம். இவர், காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவராகவும், அகில இந்திய கயர் வாரிய உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
கடந்த, 1985ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் சார்பில் போட்டியிட்டு, மன்னார்குடி நகர்மன்ற தலைவராக இருந்தார். பின்னர் , 2001 ஆம் ஆண்டு, நகர் மன்ற தலைவருக்கு போட்டியிட்டு வெற்றி வாய்ப்பினை இழந்தார்.
பின்னர், அதிமுகவில் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா முன்னிலையில் இணைந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அமமுகவில் இணைந்தவர், அமமுகவில் மாநில அமைப்புச் செயலராக இருந்தார்.
பின்னர், அமமுகவிலிருந்து விலகி மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.
கடந்த 2011 மற்றும் 2021 சட்டப் பேரவைத் தேர்தலில் மன்னார்குடி தொகுதியில் அதிமுக சார்ப்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பினை இழந்தார்.
தற்போது, அதிமுக மாநில அமைப்புச் செயலராக நியமிக்கப்பட்டதை அடுத்து, அதிமுக திருவாருர் மாவட்டச் செயலர், முன்னாள் அமைச்சர், நன்னிலம் எம்எல்ஏவுமான ஆர்.காமராஜை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
செவ்வாய்க்கிழமை, மன்னார்குடி தெற்கு வீதியில் உள்ள முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் , ஜெயலலிதா சிலைக்கு மாவட்டச் செயலர் ஆர்.காமராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் சிவா.ராஜமாணிக்கம் வந்து மாலை அணிவித்தார்.