உத்தமபாளையம்: தேனி மாவட்டம், இராயப்பன்பட்டி ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் செவிலியர்கள் குடியிருப்புகள் மழைநீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இராயப்பன்பட்டி ஊராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பல்வேறு மருத்துவ சேவைகள் செய்யப்படுகிறது குறிப்பாக 24 மணி நேரமும் குழந்தை பிரசவ சேவை இருந்து வருகிறது.
இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் செவிலியர்களுக்கு அருகிலேயே குடியிருப்பு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குடியிருப்பு மிகவும் தாழ்வான இடத்தில் அமைந்திருப்பதால் மழை நீரானது செவிலியர் குடியிருப்புக்குள் புகுந்து விடுகிறது. அதன்படி வியாழக்கிழமை பெய்த கனமழை காரணமாக குடியிருப்புக்குள் வெள்ளநீர் புகுந்தது.
பல ஆண்டுகளாக இதே சூழ்நிலை ஏற்பட்டு வருவதால் குடியிருப்புகளில் உள்ள பொருள்கள் சேதமாகி செவிலியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து இராயப்பன்பட்டி ஊராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.