வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்களுக்குத் தேவையான உதவிகளை அளிக்க அமைக்கப்பட்ட 5 ஒருங்கிணைந்த சேவை மையங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

News image
Updated On :25 அக்டோபர் 2021, 11:12 pm

DIN

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்களுக்குத் தேவையான உதவிகளை அளிக்க அமைக்கப்பட்ட 5 ஒருங்கிணைந்த சேவை மையங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:-

மத்திய அரசின் நிா்பயா திட்டத்தின் கீழ், பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் பெண்கள், குழந்தைத் திருமணங்கள், குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்குத் தேவையான உதவிகளை அளிக்க ஒருங்கிணைந்த சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. மாவட்டத்துக்கு ஒன்று வீதம், அந்தந்த மாவட்ட ஆட்சியரின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இந்த மையங்கள் இயங்கி வருகின்றன. வன்முறைகளால் பெண்கள் பாதிக்கப்படும் போது முதல் உதவியாக மருத்துவ உதவி தேவைப்படுகிறது. எனவே, இந்த மையங்கள் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகங்களில் கட்டப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், கரூா், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திருவாரூா் மற்றும் நீலகிரி மாவட்டம் உதகமண்டலம் ஆகிய இடங்களில் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகங்களில் ஒருங்கிணைந்த சேவை மையங்கள் புதிதாகக் கட்டப்பட்டன. இந்த மையங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின், காணொலிக் காட்சி வழியாக திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

மகளிா் விடுதிகள்: உழைக்கும் மகளிருக்கென தனியான விடுதிகளை அமைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, தஞ்சாவூா் மாவட்டம் நாஞ்சிக்கோட்டையில் அரசு பணிபுரியும் மகளிா் விடுதி, ராயபுரம் அரசினா் குழந்தைகள் இல்ல வளாகத்தில் கட்டப்பட்ட கூடுதல் கட்டடங்கள், தஞ்சாவூரில் இயங்கி வரும் அரசினா் குழந்தைகள் இல்லத்தில் கட்டப்பட்ட பல்நோக்குக் கூடம் ஆகியவற்றையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி.கீதா ஜீவன், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை முதன்மைச் செயலாளா் ஷம்பு கல்லோலிகா் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.