எடப்பாடி: எடப்பாடி அருகே விவசாய கிணற்றில் பிணமாக மிதந்த டிராக்டர் ஓட்டுநரின் உடல் மீட்பு. அவர் இறப்பு குறித்து காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எடப்பாடி அடுத்த நெடுங்குளம் ஊராட்சிக்குட்பட்ட சிலுவம்பாளையம் பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன், முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உறவினரான இவர், அப்பகுதிகளில் ஊராட்சிமன்ற தலைவர் உள்ளிட்ட பல்வேறு உள்ளாட்சி பொறுப்புகளை வகித்து வந்தார். இவர் தற்போது திமுகவில் இணைந்து அப்பகுதியில் செயல்பட்டு வருகிறார்..
இதையும் படிக்கலாமே.. இடிந்து விழுந்த கமலாலய சுற்றுச்சுவர்: அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு
இந்நிலையில் விஸ்வநாதனுக்கு சொந்தமான காவிரிக்கரை பகுதியில் உள்ள அவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில், இன்று காலை ஒரு ஆணின் சடலம் மிதப்பதை கண்டு அப்பகுதியில் பணிபுரிந்த விவசாய கூலித் தொழிலாளர்கள் பூலாம்பட்டி காவல்நிலையத்துக்கு தகவல் அளித்தனர்.
தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் கிணற்றில் மிதந்த ஆணின் உடலை மீட்டு எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவலர்கள் மேற்கொண்ட தொடர் விசாரணையில் கிணற்றில் பிணமாக மிதந்தவர், கோனேரிப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் சேகர் - 32, என்பதும் அவர் விஸ்வநாதனின் வீட்டில் டிராக்டர் ஓட்டுநராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.
மேலும் சேகர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அப்பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டதும், குடும்பப் பிரச்சினை காரணமாக சேகரின் மனைவி அவரை விட்டுப் பிரிந்து வாழ்ந்து வந்ததும் காவல்துறையின் விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில் சேகர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பருடன் மது அருந்த சென்றதாகவும் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சேகரன் தந்தை ஆறுமுகம் தனது மகன் இறப்பில் மர்மம் உள்ளதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில் சேகர் இறப்பு குறித்து வழக்குப்பதிவு செய்த காவலர்கள் தொடர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். நெடுங்குளம் பகுதியில் முக்கிய அரசியல் பிரமுகரான விஸ்வநாதன் தோட்டத்தில் அவரது டிராக்டர் ஓட்டுநர் பிணமாக மிதந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பான சூழலை ஏற்படுத்தியுள்ளது