பெரியார் பிறப்பால்தான் தமிழினம் புதுப்பிறப்பை அடைந்தது, மானமும் அறிவும் உள்ள சமுதாயம் உருவானதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
பெரியாரின் பிறந்தநாளையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் அவரை நினைவுகூர்ந்து பெரியாருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் சிலைக்கு மரியாதை செலுத்தினார். பெரியாரின் சிலைக்கு கீழ் உள்ள பெரியாரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் திமுகவினர் பலரும் பெரியாருக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படிக்க | பெரியார் பிறந்தநாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை
பின்னர் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற 'சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு' நிகழ்வில் கலந்துகொண்டு உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டார்.
இதையடுத்து அவர் தனது தனது ட்விட்டர் பக்கத்தில், 'மக்கள் மன்றம், நீதிமன்றம், சட்டமன்றம், நாடாளுமன்றம் என அனைத்து மக்கள் மனங்களிலும் சமூகநீதியை விதைத்த பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை அவர் பிறந்தநாளான இன்று வணங்குகிறோம். அவர் பிறப்பால்தான் தமிழினம் புதுப்பிறப்பை அடைந்தது. மானமும் அறிவும் உள்ள சமுதாயம் ஆனது' என்று பதிவிட்டுள்ளார்.