பெரியாரின் பிறந்தநாள் சமூகநீதி நாளாக அறிவிக்கப்பட்டதையடுத்து, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 'சமூகநீதி நாள்' உறுதிமொழி ஏற்கப்பட்டது.
பெரியாரின் பிறந்தநாள்(செப்.17) சமூகநீதி நாளாகக் கொண்டாடப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்தார். அதன்படி, இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலங்களிலும் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெறுகிறது.
அதன்படி, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 'சமூகநீதி நாள்' உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் அரசின் செயலர்கள், அரசு அதிகாரிகள் அனைவரும் கலந்துகொண்டனர்.
உறுதிமொழி
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியும் - யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியும் எனது வாழ்வியல் வழிமுறையாகக் கடைபிடிப்பேன்.
சுயமரியாதை ஆளுமைத் திறனும் பகுத்தறிவு கூர்மைப் பார்வையும் கொண்டதாக என்னுடைய செயல்பாடுகள் அமையும்.
சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை நான் ஒப்படைத்துக்கொள்வேன்
மானுடப் பற்றும் மனிதாபிமானமும் ஒன்றே எனது ரத்த ஓட்டமாக அமையும்,
சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்நாளில் உறுதிமொழி ஏற்கிறேன்' என்று முதல்வர் உள்பட அரசு அலுவலர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
பெரியார் சிலைக்கு மரியாதை
முன்னதாக, பெரியாரின் பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் சிலைக்கு கீழ் உள்ள பெரியாரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியர்சாமி, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, எம்.பி.க்கள் கனிமொழி, ஆ.ராசா, டி.ஆர்.பாலு உள்ளிட்ட திமுகவினரும் பெரியாரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இதையும் படிக்க | பெரியார் பிறந்தநாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை