உங்கள் தப்புக்கணக்குக்கான பதிலை தமிழக மக்களே வழங்குவார்கள் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழகத்தில் திமுகவினருக்குச் சொந்தமான 15 இடங்களில் இன்று வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்று வரும் நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது சுட்டுரை பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
மு.க.ஸ்டாலின் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவு:
"மக்களிடம் ஆதரவில்லை; படுதோல்வி உறுதி என்ற நிலையில் வழக்கம் போல பாஜக தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறது.
மிரட்டலுக்கு பயந்து அடிமையாய் காலில் விழ நாங்கள் அதிமுக அல்ல! அச்சமில்லை! துணிந்து எதிர்ப்போம்!
உங்கள் தப்புக்கணக்குக்கான தெளிவான பதிலை மக்களே ஏப்.6-இல் வழங்குவர்" என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரை வீடு, அண்ணாநகர் திமுக வேட்பாளர் மோகனின் மகன் கார்த்தியின் வீடு, ஸ்டாலின் மருமகன் சபரீசனின் நண்பர் ஜி ஸ்கொயர் பாலாவின் வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், கரூர் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இதற்கு திமுக தலைவர்களும், கூட்டணிக் கட்சி தலைவர்களும் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்து வருகிறார்கள்.