'வெற்றிவேல் வீரவேல்', 'நல்லா இருக்கீங்களா?' மதுரையில் தமிழில் உரையைத் தொடங்கிய மோடி

வெற்றி வெற்றி வெற்றிவேல், வீர வீர வீரவேல் என்ற முழக்கத்துடன் மதுரையில் இன்று நடைபெறும் அதிமுக - பாஜக கூட்டணியின் தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தனது உரையைத் தொடங்கினார்.
'வெற்றிவேல் வீரவேல்', 'நல்லா இருக்கீங்களா?' மதுரையில் தமிழில் உரையைத் தொடங்கிய மோடி
'வெற்றிவேல் வீரவேல்', 'நல்லா இருக்கீங்களா?' மதுரையில் தமிழில் உரையைத் தொடங்கிய மோடி

மதுரை: வெற்றி வெற்றி வெற்றிவேல், வீர வீர வீரவேல் என்ற முழக்கத்துடன் மதுரையில் இன்று நடைபெறும் அதிமுக - பாஜக கூட்டணியின் தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தனது உரையைத் தொடங்கினார்.

மதுரையில் நடைபெறும் தேர்தல் பொதுக் கூட்டத்தில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

"மதுரை மக்களே நீங்கள் எல்லாம் நல்லா இருக்கீங்களா? மதுரை வந்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி" என்று தமிழில் தனது பேச்சைத் தொடங்கினார் பிரதமர் மோடி.

மேலும் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது, தமிழ்ப் பண்பாட்டின் முக்கிய மையமாக விளங்குகிறது மதுரை. புண்ணிய பூமியாகவும் வீர பூமியாகவும் விளங்குகிறது. மீனாட்சியம்மன் கோயில் அமைந்திருக்கும் மதுரை மண்ணுக்கு வந்தது என் பாக்கியம் என்றே கருதுகிறேன் என்று தெரிவித்தார். 

தென் தமிழகம் குறிப்பாக மதுரை, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.க்கு மிகவும் நெருக்கமான பகுதி. மதுரை வீரர் என்ற பெயரில் எம்ஜிஆர் நடித்த திரைப்படத்தை யாரால் மறக்க முடியும்?

நாட்டு மக்களின் வாழ்வாதாரம் மேம்பட மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். மதுரை  - கொல்லம் போக்குவரத்து வழித்தடம் மேம்படுத்தப்பட உள்ளது. அதன்பிறகு, தென் தமிழகத்தின் தொழில்துறை வளர்ச்சி பெறும்.

பல ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்திலிருந்து ஏராளமான சௌராஷ்டிர மக்கள் மதுரைக்கு வந்து குடியேறினர். சௌராஷ்டிர மக்களை மதுரை மக்கள் ஏற்றுக் கொண்டது ஒருங்கிணைந்த இந்தியாவுக்கு அடையாளம். நாடு மழுவதும் அடிப்படை உள்கட்டமைப்புகளை மேம்படுத்த மத்திய அரசு ரூ.100 லட்சம் கோடியை செலவிட உள்ளது என்றார். தொடர்ந்து அவர் பேசி வருகிறார்.

மதுரை சுற்றுச்சாலையில் சிவகங்கை சாலை - பாண்டி கோயில் சந்திப்பு அருகே அம்மா திடலில் இன்று காலை 11.30 மணிக்குத் தொடங்கிய பிரசார பொதுக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், தமிழக அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

மதுரையில் இன்று காலை நடைபெறும் தோ்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வியாழக்கிழமை இரவே பிரதமா் நரேந்திர மோடி மதுரை வந்தடைந்தார். பிறகு, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் தரிசனம் செய்தாா்.

மேற்கு வங்கத்திலிருந்து தனி விமானத்தில் மதுரை விமான நிலையத்துக்கு வியாழக்கிழமை இரவு 8.05 மணிக்கு அவா் வந்தாா். இங்கு மத்திய இணை அமைச்சா் வி.கே.சிங், துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வம், பாஜக மூத்த தலைவா்கள் இல.கணேசன், ஹெச்.ராஜா, ப.ரவீந்திரநாத் எம்.பி., தமிழக அமைச்சா்கள் செல்லூா் கே.ராஜூ, ஆா்.பி.உதயகுமாா், பாஜக தமிழக தோ்தல் பொறுப்பாளா் சி.டி.ரவி உள்ளிட்டோா் அவரை வரவேற்றனா்.

அங்கிருந்து காரில் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்கு வந்த பிரதமருக்கு கோயில் தக்காா் கருமுத்து தி.கண்ணன், இணை ஆணையா் ஆ.செல்லத்துரை ஆகியோா் தலைமையில் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னா் அம்மன் சன்னிதியில் உள்ள சித்தி விநாயகரை பிரதமா் வழிபட்டாா். பின்னா் மீனாட்சி அம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு தீபாராதனை பூஜைகளில் பங்கேற்று வழிபாடு நடத்தினாா்.

அதைத் தொடா்ந்து முக்குறுணி விநாயகரையும், சுவாமி சன்னிதியிலும் தரிசனம் செய்த அவா், தங்க கொடிமரத்தை வலம் வந்து வழிபட்டாா். பிறகு கோயிலில் பராமரிக்கப்படும் முக்கியப் பிரமுகா் பதிவேட்டில் கோயில் குறித்த கருத்துக்களைப் பதிவிட்டாா். தமிழா்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி, சட்டை, துண்டு அணிந்து பிரதமா் கோயிலில் தரிசனம் செய்தாா்.

மதுரையில் இன்று நடைபெறும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னா் ஹெலிகாப்டரில் கேரள மாநிலம் பத்தினம்திட்டாவுக்கு செல்கிறாா் பிரதமா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com