ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிய போட்டியிட்ட  காங்கிரஸ் வேட்பாளர் பி.எஸ்.டபிள்யூ. மாதவராவ் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  
பி.எஸ்.டபிள்யூ. மாதவராவ்
பி.எஸ்.டபிள்யூ. மாதவராவ்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பி.எஸ்.டபிள்யூ. மாதவராவ்(63) கரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் நுரையீரல் பாதிப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது.  இதையடுத்து 1986 -ஆம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸில் விருதுநகர் மாவட்ட மாணவரணி செயலாளர்,  தமிழ்நாடு தேசிய காங்கிரஸ் மாணவரணி துணைத் தலைவர், தேசிய காங்கிரஸ் இளைஞரணி செயலாளர், தேசிய காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் குழு ஆலோசகர், சட்ட ஆலோசணைக் குழு துணைச் செயலாளர், விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தவரும், மாநில பொதுக்குழு உறுப்பினருமான மாதவராவ் முதல் முறையாக வேட்பாளராகக் களமிறக்கப்பட்டார். 

கடந்த மார்ச் 17 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்த இவர் மூன்று நாள்கள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவருக்கு மார்ச் 20 ஆம் தேதி திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு கரோனா அறிகுறியுடன் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 

இதனால் மாதவராவ்க்கு பதிலாக அவருடைய மகள் திவ்யாராவ் மற்றும் திமுக கூட்டணி கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

மாதவராவ் உடல் நிலை பாதிப்பால் அவர் மகள் வேட்பாளராக மாற்றப்படுவார் என்றுகூட தகவல் வெளியானது. ஆனால் அவ்வாறு கட்சி மேலிடம் எந்த முடிவும் எடுக்கவில்லை.

இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு சிகிச்சையில் இருந்தபோது, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் நூரையீரல் தொற்று பாதிப்பு ஏற்பட்டு செயற்கை சுவாச கருவி மூலம் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை 07.55 மணி அளவில் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் உயிரிழந்தார்.

மே 2 -ஆம் தேதி தேர்தல் முடிவு வெளியாகவுள்ள நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் காலமானது கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது ஸ்ரீவில்லிபுத்தூரில் இவருக்கு சொந்த வீடு இருந்தாலும் தொழில் ரீதியாக  சென்னையில் வசித்து வந்ததார். இவரது மனைவி மருத்துவ தொழில் பணிபுரிந்து வந்தார் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு திவ்யா என்ற மகள் மட்டும் உள்ளார். இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. இறந்த மாதவராவின் உடல் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com