திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் சாய் பாபா கோயிலில், சாய்பாபா பிறந்த நாளில், கரோனா சீற்றம் குறையப் பிரார்த்தனை செய்யப்பட்டது.
கூத்தாநல்லூர் நகராட்சிக்குள்பட்ட லெட்சுமாங்குடி, மரக்கடையில் ஷீரடி சாய்பாபா கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஸ்ரீராம நவமியான இன்று, நிறுவனர் வெள்ளையன் மற்றும் பக்தர்களின் ஏற்பாட்டின்படி, சாய்பாபாவுக்கும், கோயிலின் முன்புறம் உள்ள, பாதரட்சைக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டன. தொடர்ந்து வண்ண மலர்கள் மற்றும் மின்னும் ஆடைகளால் ஷீரடி சாய்பாபா அலங்காரம் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, அவரது பிறந்த நாளைக் கொண்டாடப்பட்டது. கோயிலின் முன்பு சாய்பாபா என எழுதப்பட்ட கேக்கை, குழந்தைகள் வெட்டினர்.
உலக கொடிய நோயான கரோனா தொற்றின் சீற்றம் குறைவதற்காக, சாய்பாபாவின் பிறந்த நாளில், பிரார்த்தனை செய்யப்பட்டது. இதுகுறித்து நிறுவனர் வெள்ளையன் கூறியது.
ஷீரடி சாய்பாபா பிறந்த நாளில், சாய்பாபாவுக்கும், பாதரட்சைக்கும் மஞ்சள், பன்னீர், தேன், தயிர், இளநீர், பால், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அனைத்து திரவியங்களாலும் அபிஷேகம் செய்யப்பட்டன. அதைத் தொடந்த்து, கேக் வெட்டப்பட்டன. மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டன.
மேலும், கரோனா தொற்றின் சீற்றம் அடங்கவும், உலக நன்மைக்காகவும் கூட்டும் பிரார்த்தனை செய்யப்பட்டன. பிரார்த்தனையில், மரக்கடை, லெட்சுமாங்குடி, கூத்தாநல்லூர், கோரையாறு, பாண்டுக்குடி, பண்டு தக்குடி, கமலாபுரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பிரார்த்தனையைத் தொடர்ந்து, அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன.
விழா ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் கவனித்தனர்.