சென்னையில் நடந்த மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்று சென்னை முதலாவது அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 10 பேரில் ஐயப்பன் என்பவர் அரசு தரப்பு சாட்சியமாக மாறிய நிலையில், மற்ற 9 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்துள்ளது சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கடந்த 2013-ஆம் ஆண்டு செப்டம்பர் 9-ஆம் தேதி கூலிப்படையால் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து சுப்பையாவின் உறவினர் ஏ.ஏ.மோகன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அபிராமபுரம் காவல்துறையினர், அரசு பணியில் இருந்த ஆசிரியர்கள் பொன்னுசாமி, மேரி புஷ்பம், வழக்குரைஞர் பாசில், வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், பொறியாளர் போரிஸ், கூலிப்படையைச் சேர்ந்த ஏசுராஜன், முருகன், செல்வபிரகாஷ், ஐய்யப்பன் ஆகிய 10 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கு சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன் விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதில் கூலிப்படையைச் சேர்ந்த ஐயப்பன் தவிர குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் இன்று மதியம் அல்லது பிறகு வெளியிடப்படும் என்று தெரிகிறது.
மருத்துவர் சுப்பையா கொலை செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதியிலிருந்து சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. அதைவைத்து துப்புத் துலக்கிய காவல்துறையினர், கூலிப் படையைச் சேர்ந்த 4 பேர் உள்பட 10 பேரை கைது செய்தனர். விசாரணையில், நிலத்தகராறில், மருத்துவர் சுப்பையா கூலிப் படையினரை வைத்துக் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.