கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் மின் இணைப்பு கேட்ட மூதாட்டியின் வீட்டை மாவட்ட ஆட்சியர் வீ.முரளிதரன் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.
தேனி மாவட்டம் கம்பம் சுருளிப்பட்டி ரோட்டில் வசிப்பவர் வீரபத்திரன். அவரது மனைவி வீராயி. இவர்கள் வசித்து வரும் வீட்டிற்கு மின்சார இணைப்பு கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
மனு தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வீ.முரளிதரன் கம்பம் நகருக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்தவர் மின்சார இணைப்பு கேட்டு விண்ணப்பித்த வீரபத்திரன்- வீராயி தம்பதியர் வீட்டிற்குச் சென்றார்.
வீட்டினை நேரில் பார்வையிட்டு மின்சார இணைப்பு வழங்க ஆவண செய்வதாக கூறி, மேலும் அவர்களது குடும்ப நிலையை விசாரித்தார்.
பின்னர் அருகிலிருந்த வருவாய் ஆய்வாளர் ஹெச்.செந்தில்குமாரிடம் தனது சொந்த பணத்தை கொடுத்து 2 போர்வைகள் மற்றும் சேலையினை வாங்கி தரக் கூறினார். அதன்பேரில் வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் போர்வை மற்றும் சேலைகளை வீரபத்திரன்- வீராயி தம்பதியினருக்கு கொடுத்தனர். மூதாட்டி வீராயி மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தார்.