தம்மம்பட்டி: தம்மம்பட்டி அருகே ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து பணத்தைத் திருட முயற்சி நடந்துள்ளது. தப்பியோடிய வடமாநில இளைஞரை, சி.சி.டி.வி. காட்சியின் பதிவைக் கொண்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டி பஜனைமட தெரு பேருந்து நிறுத்தத்தில் அருகருகே பொதுத்துறை மற்றும் தனியார் வங்கி ஏ.டி.எம். செயல்பட்டு வருகிறது.
இதனிடையே நேற்று நள்ளிரவு கனரா வங்கியின் ஏ.டி.எம்.மிற்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர் ஏ.டி.எம்.மின் முன்பக்க கண்ணாடி மற்றும் இயந்திரத்தை உடைத்து அதிலிருந்த பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர். அப்போது ஏ.டி.எம். இயந்திரத்தை உடைக்கும் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் ஏ.டி.எம். இயந்திரத்தை சேதப்படுத்திய, வட மாநிலத்தைச் சேர்ந்த மர்ம நபரை வளைத்துப் பிடித்த பொதுமக்கள், தம்மம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் வட மாநில நபரை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணைக்காக நள்ளிரவில் காவல்நிலையத்தில் அமர வைத்துள்ளனர். அப்போது காவலர்கள் கண் இமைக்கும் நேரத்தில் வட மாநிலத்தை சேர்ந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
இதனையடுத்து உடைக்கப்பட்ட ஏ.டி.எம். இயந்திரத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தப்பியோடிய மர்ம நபரை காவலர்கள் தேடி வருகின்றனர். இதனால் ஏ.டி.எம். மில் இருந்த பணம் திருட்டுப் போகாமல் தப்பியது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.