தில்லி பல்கலைக்கழக நிர்வாகத்தால் நீக்கப்பட்ட படைப்புகளை மீண்டும் சேர்க்க வேண்டுமென தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ் எழுத்தாளர்கள் பாமா, கவிஞர் சுகிர்தராணி ஆகியோரின் படைப்புகளை தில்லி பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“தில்லி பல்கலைக்கழகத்தின் ஆங்கிலப் பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருந்த தமிழ் எழுத்தாளர் பாமாவின் சங்கதி, தமிழ்க் கவிஞர் சுகிர்தராணியின் கைம்மாறு, என்னுடல் ஆகிய மொழியாக்கப் படைப்புகளை அந்தத் துறை பேராசியர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லாமலேயே மேற்பார்வைக் குழுவின் ஆலோசனையின் பெயரில் பல்கலைக்கழக நிர்வாகம் நீக்கியிருப்பது ஒருதலைப்பட்சமான முடிவு. இது எவ்வகையிலும் ஏற்க முடியாத செயலாகும்.
பெண்கள் உரிமை - ஒடுக்கப்பட்டோர் விடுதலை - மானுட மேன்மை குறித்து பல படைப்புகளை வழங்கி வரும் எழுத்தாளர் பாமா, கவிஞர் சுகிர்தராணி ஆகியோரின் எழுத்துகளைக் கட்சி அரசியல் - மதவாதக் கண்ணாடிகள் அணிந்து பார்க்கும் வழக்கத்தைக் கைவிட்டு, அவற்றை தில்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் மீண்டும் சேர்த்திட வேண்டும் எனப் பல்கலைக்கழக நிர்வாகத்தையும் மத்திய அரசையும் வலியுறுத்துகிறேன்.”